நாற்பதாண்டு வங்கிப் பணியில்
---------------------------------------------------
நான் சந்தித்த ஆளுமைகள் ----------- ( 21 )
( தொடர்ச்சி)---------------------------------------------------
நான் சந்தித்த ஆளுமைகள் ----------- ( 21 )
---------------------------------------------
-தோழர் இரா. ஜவகர் --------
----------------------------------------------------
----------------------------------------------------
கூட்டாக அமர்ந்து வாசிப்பதும் விவாதிப்பதும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது . சந்தேகங்களை மட்டும் குறித்து வைத்துக்கொண்டு கோவில்பட்டிக்கு அடிக்கடி வந்து போகும் அருமைத் தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களிடம் கேட்போம் .
அவரும் பொறுமையாக, . சோவியத்திலிருந்து வரும் ஆங்கில இதழ்களிலிருந்து குறிப்பாக சர்வதேச அரசியல் குறித்த கட்டுரைகளை வாசித்துக் காட்டுவார் , விளக்கிப் புரியவும் வைப்பார்.
சகோதர தொழிற்சங்க மாநாடுகள் எங்கு நடந்தாலும் அழைப்பில்லாமலே சென்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கவனிப்பதும் பேரணியில் ஆதரவு தெரிவித்து ஒலி முழக்கங்கள் எழுப்பிவிட்டு ஊர் திரும்புவதும் எங்கள் குழுவின் பணிகளாக மாறின.
இப்படித்தான் தோழர் ஜோதிபாசு பங்கேற்ற பொன்மலை ரயில்வே ஊழியர் ( டி ஆர் இ யூ ) மாநாட்டுக்கும் , தோழர் ஹரிகிருஷ்ணக் கோனார் பங்கேற்ற பழனிவிவசாயிகள் சங்க மாநாட்டுக்கும் போய்வந்தோம் , தோழர் ஜவகர் தலைமையில்...!!
கயத்தாறு எட்டயபுரம் போன்ற பக்கத்து ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சைக்கிளில் சென்று திரும்புவோம்
. இக்காலத்தில்தான் தோழர் வி பி சி அவர்கள் சென்னை மூலக்கடையில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி செய்தி தமிழகத்தையே உலுக்கியது.. வி.பி.சி தாக்கப்பட்டதும் எழுதப்பட்ட கவிஞர் தணிகைச்செல்வனின் உணர்ச்சியூட்டும் கந்தகக் கவிதையை நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளாக அச்சிட்டு அனைத்துப் பேருந்துகளிலும் நாங்களே ஒட்டினோம். ( சி பி எம் கட்சித்தலைவர்கள் உட்பட) கோவில்பட்டி ஊரே பரபரப்பில் ஆழ்ந்தது.
அடுத்த நாளே அன்றைய மாவட்ட செயலாளர் தோழர் சு பாலவிநாயகம் அவர்கள் மூத்த தோழர் சிவகிரி எம் பாண்டியன் அவர்களை அனுப்பி விசாரிக்க சொன்னார். மாமு தையல்கடைத் தோழர் மாரிமுத்து என்னை பெருமாள் கோவிலருகே நின்று கொண்டிருந்த தோழர் பாண்டியனிடம் அழைத்துச் சென்றார்
. முதலில் ஆர்வத்துடன் செய்த எங்கள் பணிகளை மனதாரப் பாராட்டிவிட்டு பின்னர் கனிவான வார்த்தைகளில் அறிவுரை வழங்கினார் . " இனி வரும் காலத்தில் உள்ளூர் மற்றும் உயர் மட்டக் குழுத் தோழர்களிடம் கலந்து பேசி இத்தகைய பணிகளை நீங்க செய்யலாமே?? உங்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் நாங்கள் உதவவும் , வழிகாட்டவும் முடியுமல்லவா..?! " என்றார்.
அன்றிலிருந்து எங்களது பணிகள் ஒழுங்கு படுத்தப் பட்டன.. வரையறுக்கப்பட்டன. கிராமங்களுக்கு வார இறுதியில் செல்ல ஆரம்பித்தோம் . விவசாயத் தோழர்களிடத்தில் எப்படிப் பேசுவது என்பதையும் தோழர் எம் பி அவர்கள் எங்களுக்கு உடனிருந்து பயிற்சியளித்தார். . தீக்கதிரில் தோழர் ஐ மா பா எழுதி வந்த " கண்ணோட்டம் " பகுதியிலிருந்து கிராமத்துப் பழமொழிகளை எடுத்துவைத்துக்கொண்டு கூட்டங்களில் பயன்படுத்தத் தொடங்கினோம்.
தோழர் வி பி சிந்தன் நெல்லைக்கு மின் ஊழியர் சங்க மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த போது தோழர் சு பாலவிநாயகம் அவர்கள் கோவில்பட்டித் தோழர்களை அவரிடம் இப்படி அறிமுகம் செய்து வைத்தார். " தோழர் வி.பி.சி, ...!! தமிழ் நாட்டில் இவர்களைப் போல் செயல் படும் இளைஞர்கள் குழுவை வேறெங்கும் நீங்கள் காண முடியாது ," என்று..!! அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த வி.பி.சி. தனியாக ஒவ்வொருவரையும் விசாரித்து இயக்கப் பணிகளில் இன்னும் தீவிரமாக செயலாற்ற ஊக்கப் படுத்தினார்.
கடலூர் சிறையில் தோழர் சு பா வி யும், தோழர் ஐ மா பா அவர்களும் தமிழில் மொழி பெயர்த்த கார்ல் மார்க்சின் " மூலதனம்" ஐ மா வின் அழகான எழுத்துக்களில் பத்துக்கும் அதிகமான இரண்டு குயர் நோட்டுக்களில் இருந்தன. அவற்றை எங்களிடம் பிழை திருத்தங்களுக்காக பாலவிநாயகம் அவர்கள் கொடுத்தனுப்பினார் .
உண்டியல் கடைத் தோட்ட வீடு மீண்டும் களைகட்டியது, கலகலப்பானது. மிகவும் சிரமமானதாக இருந்தாலும் விரும்பி அப்பணியை மேற்கொண்டோம். அச்சில் வரவில்லையே தவிர அந்த மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் பணி மார்க்சைப் பற்றிய ஆழமான புரிதலை எங்களுக்குள் ஏற்படுத்தியதை என்றும் மறுப்பதற்கில்லை.
ஆசிரியப்பணியிலும் முன்மாதிரி ஆசிரியராக , பட்டதாரி. ஆசிரியர் சங்கப் பணிகளிலும் முன்னோடியாகப் பணியாற்றிய ஆர் ஜே அவர்களின் திருமணம் அவரது தோட்டத்து முற்றத்தில் அவரைப்போன்றே ஆர்ப்பாட்டம் சிறிதுமின்றி எளிமையாக நடைபெற்றது
. திருமண வீடுகளில் உணவு இலாகா அவர்வசம் இருக்கும். ( மாநிலக்குழு அலுவலகத்தில் கூட உணவுக் கூடம் அவர் வசம் இருந்த தினங்களைப் பார்த்துள்ளேன் ). நேர்மை கடும் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்த ஜவகர் அதிகம் பேச மாட்டார் . ஆனால் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு முதிர்ச்சி நிறைந்த வழிகாட்டுதலைத் தரவல்லவர். ஆழம் காண முடியாத கடல் அவர்;. சிரிப்பைத் தவிர வார்த்தைகளை சிந்த விரும்பாதவர்.
. அவரது கட்டுப்பாடு மிக்க ஆளுமையை சரியாகப் புரிந்து வைத்திருந்த மார்க்சீய இயக்கம் ஒரு கட்டத்தில் ஆசிரியப்பணியைத் துறந்து விட்டு இயக்கத்தில் முழு நேரமும் இயங்க வருமாறு பணித்தது. . எந்தத் தயக்கமுமின்றி கட்டுப்பாடு மிக்க போர்வீரன் போன்று அதை ஏற்று சென்னைக்கு இடம்பெயர்ந்தார். மாநிலக்குழு அலுவலகப் பொறுப்பாளராக மாநிலக் குழு உறுப்பினராக உயர்ந்தார். தோழர் நல்லசிவன் போன்ற தலைவர்களைக் கண்ணின் மணியாகக் காத்து நின்றார்
. குடும்ப சூழல் காரணமாக சில ஆண்டுகள் தஞ்சை மாவட்டக்குழுவில் பணியாற்றிவிட்டு சென்னை மாநிலக்குழு அலுவலகத்தின் நூலகராக பாரதி புத்தகாலயக்கிளை பொறுப்பாளராக இன்றும் இன் முகத்துடன் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் எங்கள் பால்யகால கேப்டன் அன்புத்தோழன் ஜவகர் அண்மையில் ( ஆகஸ்ட் எட்டு) எழுபது வயதை நிறைவு செய்தார் .
கோவில்பட்டியிலிருந்தாலும் தஞ்சையிலிருந்தாலும் சென்னை மாநிலக்குழு அலுவலகத்திலிருந்தாலும் ஆர் ஜே இயக்கத்தின் அரிய பொக்கிஷம்..!!
அன்பொழுக ' வே மணி' என்று அழைக்கும் உடன்பிறவாத உற்ற தோழன் ஜவகர் பல்லாண்டு நலமுடன் வாழிய வே..!!